பாகம் 30
இந்து, சேலை உடுத்திக் கொண்டிருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டான் அர்ஜுன். அவள் எங்காவது வெளியே செல்கிறாளோ என்று நினைத்தபடி சாப்பிட அமர்ந்தான். இந்து அவனுக்கு பரிமாறினாள்.
"இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷலா?"
"பாயசம் பண்ணி இருக்கேன்"
"பாயசமா...? இன்னைக்கு என்ன?" என்று கேட்டுக்கொண்டு, பாயசத்தை ருசித்தான்.
"நம்ம பிரச்சனை எல்லாம் தீந்துடுச்சில்ல அதுக்காக செஞ்சேன்"
"சோ ஸ்வீட்" என்று சிரித்தான்.
"பாயசம் ரொம்ப ஸ்வீட்டா இருக்கா?" என்றாள்.
இல்லை என்று தலையசைத்தபடி,
"நான் உன்னை தான் ஸ்வீட்டுன்னு சொன்னேன்"
"பாத்துங்க, என்னை நிறைய சேர்த்துக்கிட்டா, உங்களுக்கு சர்க்கரை வியாதி வந்திட போகுது..." என்றாள் கிண்டலாக.
"வராது... நீ என்னோட எல்லா வித நோயையும் குணபடுத்துற சர்க்கரை..." என்று அவன் கூற, புன்னகை புரிந்தாள் இந்து.
"எதுக்காக ஸாரி கட்டியிருக்க? எங்கயாவது போறியா?"
இல்லை என்று தலை அசைத்தாள்.
" பின்ன? "
"காரணம் இல்லாம நான் புடவை கட்டக் கூடாதா?"
"ஓ... கட்டலாமே... ஸாரி உனக்கு ரொம்ப நல்லா இருக்கு" என்றான்.
உள்ளூர புன்னகைத்தாள் இந்து. அவள் நினைத்தது சரி தான். அர்ஜுனுக்கு புடவையை உடுத்தினால் பிடிக்கிறது. அதைத்தான் அவளுடைய பிறந்தநாளன்று அவள் பார்த்தாளே...
"காலையில எப்போ எழுந்த?"
"வழக்கம் போல ஆறு மணிக்கு"
"உனக்கு உடம்பு சரியில்லாதப்போ ஏன் இதெல்லாம் செய்ற? ரெஸ்ட் எடுத்துக்கலாம் இல்லையா...?"
"நான் நல்லா இருக்கேன்"
"சரி வா, உட்கார்ந்து சாப்பிடு"
"நான் அப்புறமா சாப்பிடறேன்"
"ஏன்...? என் கூட சாப்பிட மாட்டியா?"