பாகம் 41
பாறைக் கோவில் என்று பெயர் பெற்ற அந்த கோவிலுக்கு 11 படிகள் இருந்தன. அந்தக் கோவில், இந்துவை வெகுவாய் கவர்ந்தது. அந்த அமைதியான சூழ்நிலை அவள் மனதை ஆக்கிரமித்தது. கண்ணை மூடி, அம்மனை வணங்கினாள் இந்து. அவளை தொந்தரவு செய்யாமல் சாமி கும்பிடவிட்டான் அர்ஜுன்.
அவர்களைப் பார்த்த உடனேயே, அந்த இடத்திற்கு அவர்கள் புதியவர்கள் என்பதை புரிந்து கொண்டார் பண்டிதர்.
"நீங்க இந்த இடத்துக்கு புதுசா தெரியறீங்களே..." என்றார்.
"ஆமாம், நாங்க சென்னையில இருந்து வறோம்" என்றாள் இந்து.
"இங்க வர்றதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?"
"இது என் மாமியார் வாழ்ந்த கிராமம்"
"யார் உங்க மாமியார்?"
" சீதாராணி "
"ரொம்ப சந்தோஷம்... சீதாம்மா, ஒவ்வொரு வருஷமும், அவங்க பையனுடைய பிறந்தநாளுக்கு இங்க வருவாங்க"
"அப்படிங்களா?" என்று தன் கண்ணை அர்ஜுனின் மீது ஓட விட்டாள் இந்து.
அவள் நினைத்தது போலவே அவன் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டான். அவனுடைய அம்மாவைப் பற்றி பேசும்போதெல்லாம் அவன் எவ்வளவு கலகலத்து போகிறான்... இந்து அதை எண்ணி ஆச்சரியப்படாமல் இருந்ததில்லை.
"எங்க அம்மாவுடைய வீடு எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?" என்றான் அர்ஜுன்.
"தெரியும்... கிராம வாசிங்க எல்லாருக்கும் தெரியும். யாரைக் கேட்டாலும் உங்களை அழச்சிகிட்டு போய் விட்டுடுவாங்க"
"அப்படிங்களா? "
"இது ரொம்ப சின்ன கிராமம். ரொம்ப குறஞ்ச ஆட்கள் தான் இங்க வசிக்கிறாங்க. அதனால, எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குறதுல எந்த ஆச்சரியமும் இல்ல. கிராமத்துல அப்படித் தான். உங்க அம்மாவுடைய வீடு தான், இந்த கிராமத்துல இருக்கிற ஒரே ஒரு பழைய வீடு. உங்க பாட்டி, தன்னுடைய சித்தப்பா மகளுக்கு அதை வித்துட்டு போய்ட்டாங்க. ரொம்ப நாளா, அவங்களும் அதை புதுப்பிக்க நினைச்சுகிட்டு இருக்காங்க... ஆனா, பணம் இல்லாததால, அதை அவங்களால செய்ய முடியல." என்றார் பண்டிதர்.