பாகம் 49
அர்ஜுனுக்கு கொடுக்க காபியுடன் வந்தாள் இந்து.
"அப்பாவும் ஹீனாவும் காபி குடிச்சிங்களா?"
"தெரியலங்க "
"குடிச்சாங்கலானு பாரு... அப்படியே கிரிக்கும் காபி போடு. அவன் வந்தா, உட்கார சொல்லு..."
"கிரி அண்ணா வர போறாரா?" என்றாள் ஆர்வமாக
"ஆமாம். நான் ஒரு ஃபைலை மறந்துட்டு வந்துட்டேன். அதை கொண்டு வரான்..."
எதையோ துரிதமாய் யோசித்தவள் ஹீனாவின் அறையை நோக்கி ஓடினாள். அவளைப் பார்த்தவுடன் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் ஹீனா. அவள் சோகமான முகத்தை பார்த்து கவலைப்பட்டாள் இந்து.
"உனக்கு காபி வேணுமா?" என்றாள்.
"வேணாம் அண்ணி"
"வேற ஏதாவது?"
"வேண்டாம்... "
"கிரி அண்ணனுக்கு காபி போடப் போறேன். அதான் உனக்கும் வேணுமான்னு கேட்டுட்டுப் போகலாமுன்னு வந்தேன்" என, கூற வேண்டிய விஷயத்தை கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் இந்து.
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஹீனா. இப்பொழுது இந்து கூறியது உண்மையா? கிரி இங்கு வரப் போகிறாரா? பரபரவென குளியலறைக்கு ஓடிச் சென்று முகம் கழுவினாள். அவள் சமையலறைக்கு வந்த பொழுது பாலை ஏற்கனவே சூடு படுத்தியிருந்தாள் இந்து.
"அதுக்குள்ள உன்னுடைய மனசு மாறிடுச்சா என்ன?" என்றாள் இந்து.
"இல்ல அண்ணி. எனக்கு போர் அடிச்சது. அதான் இங்க வந்தேன்"
"ஓ..."
"நான் காபி போடட்டுமா?"
"அப்பாவுக்கும் சேர்த்துப் போடு"
"சரி "
அப்பொழுது அவர்கள் அழைப்பு மணியின் ஓசையை கேட்டார்கள்.
"கொஞ்சம் யார் வந்திருக்கிறதுன்னு பாக்குறியா?" என்றாள் இந்து
"ஓ, பாக்குறேனே" அவள் அங்கிருந்து ஓடினாள்.
அவள் கதவைத் திறந்தவுடன், அவளைப் பார்த்து திடுக்கிட்டான் கிரி. அவள் எதுவும் பேசத் தொடங்கும் முன், அவளை தாண்டிக் கொண்டு உள்ளே சென்றான், அர்ஜுன் மேலிருந்து கீழே இறங்கி வருவதைப் பார்த்து. மறுபடியும் சமையலறைக்குச் சென்றாள் ஹீனா.