பாகம் 35
இதற்கிடையில், சங்கர் இல்லம்...
"நீங்க சொல்றது உண்மையா பா?" என்றாள் ஹீனா.
"ஆமாம். உங்க அம்மா, ஜெயிலில் இருந்து தப்பிச்சுட்டா"
"எப்படிப்பா அவங்க அதை செஞ்சாங்க?"
"அது தான் எனக்கும் தெரியல. உங்க அம்மாவுடைய அதிகப்படியான தைரியம், எனக்கு பயத்தை தான் தருது. அவ என்ன செய்ய போறாளோ தெரியல"
"நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. அவங்களால எதுவும் செய்ய முடியாது"
"அவளை குறைச்சி எடை போடாதே. அவ அர்ஜுனை கொல்லவும் துணிவானனு நான் எப்பவுமே நெனைச்சது கிடையாது. அர்ஜுன் அவளை ஜெயிலுக்கு அனுப்புனதுக்காக இப்போ அவன் மேல அவ ரொம்ப கோவமா இருப்பா. ஏதோ ஒரு திட்டத்தோட தான் அவ ஜெயிலில் இருந்து தப்பி இருக்கணும்"
"என்ன திட்டம்?"
"யாருக்கு தெரியும்?"
சங்கர், ஹீனாவின் கரங்களைப் பற்றிக் கொண்டார்.
"எனக்கு ஒரு உதவி செய்யறியா மா?"
"நிச்சயமா செய்றேன் பா"
"உங்க அண்ணனையும் அண்ணியையும் ஜாக்கிரதையா இருக்க சொல்லு. அர்ஜுன் மாஷாவை ரொம்ப சாதாரணமா எடுத்துக்க போறான்..."
"இல்ல பா. அண்ணன் அவங்களை சாதாரணமாக எடுத்துக்கவே மாட்டார். ஏன்னா, அண்ணியை அவர் ரொம்ப காதலிக்கிறார்"
"அதனால தான் அவன் ஜாக்கிரதையா இருக்கனும்னு சொல்றேன். இந்துவுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா, அவன் உடைஞ்சி போய்விடுவான்"
"அவரு இந்த நேரம், அம்மா தப்பிச்சி போன விஷயத்தை பத்தி தெரிஞ்சிகிட்டிருப்பார்"
"இருக்கலாம்... ஆனா, அதை அவனுக்கு தெரியப்படுத்த வேண்டியது நம்முடைய கடமை "
"அவங்க ரெண்டு பேரும் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. இந்த விஷயம், அவர்களுடைய சந்தோஷத்தை கெடுக்குமேன்னு தான் யோசனையா இருக்கு "
"இது ரொம்ப முக்கியமான விஷயம் ஆச்சே... "
"அவங்ககிட்ட இத பத்தி சொல்றதை விட, வேற ஒரு சரியான ஆள்கிட்ட சொன்னா சரியா இருக்கும்னு எனக்கு தோணுது "