பாகம் 36
மறுநாள் காலை
வழக்கம் போல், அலுவலகம் செல்ல கிளம்பிகொண்டிருந்தான் அர்ஜுன். அப்போது அவன் சட்டையில் இருந்த ஒரு பொத்தான், கழண்டு விழுந்தது.
"டேமிட்..." என்றான்.
அப்பொழுது அவர்களுடைய அறைக்குள் நுழைந்தாள் இந்து.
"என்ன ஆச்சுங்க?"
"பட்டன் பிஞ்சு போச்சு" என்று தன் சட்டையைக் கழட்ட போனவனை, கையை பிடித்து தடுத்து நிறுத்தி,
"அவ்வளவு தானே... இருங்க, நான் தைச்சி கொடுக்கிறேன்" என்று அலமாரியிலிருந்து ஊசியையும், நூலையும் எடுத்து, கீழே விழுந்து கிடந்த பொத்தனை எடுத்து, அவன் சட்டையில் வைத்து தைய்கத் தொடங்கினாள்.
பொத்தானை தைத்துக்கொண்டிருந்த இந்துவை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான் அர்ஜுன். அவள் இப்படி அவனிடம் நெருங்கி, நெருங்கி வந்தால், அவன் எவ்வளவு நாள் திடமாய் இருக்க முடியும்? அதே நேரம், அவன் அருகில், அவள் வரக் கூடாது என்று, அவன் மனதார நினைத்தான் என்றும் சொல்வதற்கில்லை. உண்மையிலேயே அவள் தாம்பத்திய வாழ்வுக்கு ஏற்றவள் தானா? வித்யா, கோவிந்தனிடம் அப்படி சொன்னதாக தானே கூறினாள் இந்து. ஆனால், வித்யாவைப் போன்ற ஒரு பேராசைக்கார பெண்மணியை எப்படி நம்புவது? கோவிந்தனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க, அவள் பொய் கூட கூறியிருக்கலாம். அவளுடைய வார்த்தையை நம்புவது சரியாகாது. ஆனால், தான் அவளை நிராகரிப்பதாக இந்து நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? என்ற எண்ணமும் அர்ஜுனுக்கு பயத்தை அளித்தது. அவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரு புரிதலை அது நிச்சயம் பாதிக்கும். ஆனால், அவளுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயத்துடன் எப்படி அவன் அவளை நெருங்க முடியும்? என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்தான் அர்ஜுன்.
"என்னை இப்படி வைச்ச கண் வாங்காம பாக்குறதை நிறுத்துங்க. நம்ம உறவைப் பத்தி நீங்க ரொம்ப யோசிக்க வேண்டாம். எனக்கு புரியுது. நம்ம நினைக்கிறபடி எல்லாம் நடக்கிறது இல்லை. எதார்த்தத்தை நம்ம ஏத்துகிட்டு தான் ஆகணும். அம்மா சொன்னதை நம்ம பெருசா எடுத்துக்க கூடாது." என்று அவள் கூற அசந்து போனான் அர்ஜுன்.