பாகம் 48
ஹீனா யாருடன் அழுதுகொண்டு பேசுகிறாள் என்று தெரிந்துகொள்ள, தூணின் பின்னால் மறைந்து நின்றாள் இந்து.
"ஏன் என்னோட போனை நீங்க எடுக்க மாட்டேங்குறீங்க?"
"...."
"பொய் சொல்லதீங்க... நீங்க வேணுமுன்னே என்னை அவாய்ட் பண்றிங்க..."
"...."
"இப்போ, நான் லேண்ட் லைனில் இருந்து பேசுறதால தான் நீங்க பேசுனீங்க..."
"...."
"உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன். ஆனா உங்களுக்கு என்னை பிடிக்கும். அது எனக்கு தெரியும் "
"....."
"எப்பவுமே என்னுடைய எதிர்காலத்தை நான் யாரோட கழிக்க போறேன்னு நினைச்சி பார்த்ததே இல்லை. ஏன்னா, நான் யாரையும் நம்ப தயாரா இல்லை. ஆனா, நீங்க என்னுடைய அண்ணனை மாதிரியே இருக்கீங்க. அதனால தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்னை புரிஞ்சுக்கங்க..."
"...."
"நான் உங்களை கட்டாயப்படுத்துறதனால என்னை நீங்க ரொம்ப சீப்பா நிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்... "
"...."
"வேற எப்படி நான் நினைக்கிறது?"
"....."
"சரி, நான் போனை வைக்கிறேன். இனிமே நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்" அவள் அழைப்பை துண்டித்தாள்.
இந்துவுக்கு ஆச்சரியமாய் போனது. அவள் பேசிக்கொண்டிருந்தது ஒரு ஆண் மகனிடம் என்பது தெளிவு. அவள் அவனை விரும்புகிறாள் என்பது தெள்ளத் தெளிவு. யார் அவன்? அவன் அர்ஜுனை போல் போல் இருப்பதாக கூறுகிறாளே... அப்படிப்பட்டவன் யார்?
கார்டு லெஸ் போனை வைத்து விட்டு, தன் அறைக்கு சென்று விட்டாள் ஹீனா. அவள் வெளியே வரமாட்டாள் என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, அந்த ஃபோனை எடுத்து ரீடயல் செய்தாள் இந்து. ஆனால், மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படவில்லை. ஒருவேளை, அவன் ஹீனா தான் அவனுக்கு மறுபடியும் போன் செய்வதாக நினைத்து அழைப்பை ஏற்காமல் இருக்கிறான் போலிருக்கிறது. அந்த ஃபோன், காலர் ஐடியுடன் இருந்ததால், மீண்டும் ரீ டயல் செய்து, அந்த எண்ணை ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொண்டாள் இந்து. ஏதாவது ஒரு கைபேசி கிடைத்தால் அதன் மூலம் போன் செய்து அவன் யார் என்பதை தெரிந்துகொள்ள நினைத்தாள்.