16 மாற்றம்
"எதுக்காக இப்போ எனக்கு ஃபோன் பண்ணிங்க? நீங்க எவ்வளவு நல்ல வேலை செஞ்சு வச்சிருக்கீங்கன்னு சொல்றதுக்காகவா?" சீறினான் முகுந்தன்.
அதைக் கேட்டு திகைத்தார் ஜானகி. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் பேசியதை பதிவு செய்து முகுந்தன் கேட்டு விட்டான் என்ற விஷயம் அவருக்கு தெரியாது அல்லவா? முகுந்தன் அப்படியெல்லாம் செய்வான் என்று யார் தான் யோசிக்க முடியும்?
"எதுக்குடா என் மேல இப்படி பாயுற? நான் என்ன செஞ்சேன்?" என்றார் குழப்பத்துடன்.
"என்னை விட்டுட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நீங்க மீரா கிட்ட சொல்லல?" எரிந்து விழுந்தான் அவன்.
அதிர்ச்சி அடைந்தார் ஜானகி. அதைப் பற்றி முகுந்தனுக்கு எப்படி தெரிந்தது? மீரா கூறிவிட்டாளா? ஆனால் ஏன் அப்படி செய்தாள்? அந்த உரையாடலை பயன்படுத்தி, அவள் முகுந்தனிடம் ஏதாவது மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று நினைக்கிறாளா? இல்லை. நிச்சயம் அவள் அவரிடம் கூறாமல் அப்படி செய்திருக்க மாட்டாள். நிச்சயம் இதைப் பற்றி மீரா முகுந்தனிடம் எதுவும் கூறியிருக்க மாட்டாள். அவளுக்கு தெரியும், அப்படி கூறினால், அவருக்கும் முகுந்தனுக்கும் இடையில் பிரச்சனை ஏற்படும் என்று. அதனால் மீரா அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்த ஜானகி, அதைப்பற்றி முகுந்தனிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்தார்.
"ஏன் எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க? உங்க மருமக கிட்ட மட்டும் தான் பேசி, அவளை அப்செட் பண்ணுவீங்களா?"
என்னடா இது...! மீரா அப்செட்டாக இருப்பதை பற்றி முகுந்தன் கவலைப்படுகிறானா? ஏதோ புதிதாய் தெரிகிறதே...!
"எல்லாம் சரி... நாங்க என்ன பேசினோம்னு உனக்கு எப்படி தெரியும்?" என்றார் ஜானகி.
திகைத்தான் முகுந்தன். கோபம் கண்ணை மறைத்ததில், இப்படி ஒரு கேள்வியை ஜானகி எழுப்புவார் என்பதை அவன் யோசிக்காமல் விட்டு விட்டான்.
YOU ARE READING
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
Romanceதனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடைய...