எங்கே இவர்களையெல்லாம் நாம் பார்த்தோம் என சிந்தித்தபடி நின்றிருந்தான் திவாகர். கண்கள் அவளது கழுத்தில் தவழ்ந்த மஞ்சள் கயிற்றைத் தீண்டி மீண்டது.
அவளைத் தொடலாமா.. அழைக்கலாமா.. எனத் தயங்கியபடி நின்றிருந்தான் திவாகர்.
அதற்குள் அந்த அறைக்குள் அவளைத் தேடிக்கொண்டு பாட்டியம்மாள் வந்துவிட, அவர் கையில் காபி டம்ளரைப் பார்த்தவன் ஆர்வமாகக் கைநீட்டினான்.
அவரோ, "உங்களுக்கும் வேணுமா தம்பி? கொஞ்சம் இருங்க... வேற எடுத்துட்டு வாரேன்." என வார்த்தையை மட்டும் தந்துவிட்டு, நாசிதுளைக்கும் அந்த சூடான, மணம்மிக்க காபியை வானதியிடம் தந்தார்.
"கண்ணு... இந்தாம்மா.. நேத்திருந்து எதுவுமே சாப்பிடலையே.. காபியாச்சும் குடிம்மா... என் கண்ணில்ல...?"
'இங்க ஒருத்தன் தவியாத் தவிக்கறேன் காபிக்காக, வேணான்னு சொல்லுறவ கிட்டப்போயி கெஞ்சிட்டு இருக்குது பாரு கிழவி!!'
அவள் எப்படியும் வேண்டாமென்பாள், வாங்கிக் குடித்துவிடலாம் என ஆவலுடன் நின்றான் திவாகர். அவளோ, கண்ணைத் துடைத்துவிட்டு, பவ்யமாகக் காபிக் கோப்பையை வாங்கி, அதன் வாசனையை முகர்ந்து, ஆசுவாசமாகி, மெல்ல ரசித்து அதைப் பருகத்தொடங்க, அவள் காபிஅருந்தும் அழகைக் கண்டவனது பசி இன்னமும் அதிகம்தான் ஆகியது.
ஏமாற்றத்துடன் வெளிக்கூடத்துக்கே திரும்பி வந்தான் அவன். இரண்டு மணியளவில் ஈமக்கிரியைகளை முடித்துவிட்டு வேதாசலமும் மற்றவர்களும் வந்துவிட்டிருந்தனர்.
தகன சடங்கு செய்ய ஆண்வாரிசு இல்லாததால், மின் தகனம் செய்துவிட்டு வந்திருந்தனர்.
துக்கவீட்டில் நடந்த அவசரக் கல்யாணம் இப்போதுதான் அனைவரின் வாய்க்கும் அவலாகியிருந்தது.
சுற்றியிருந்தோர் ஏதேதோ கிசுகிசுக்க, வேதாசலம் மகனருகில் வந்தார்.
"போயி வானதிகிட்ட ஒருவார்த்தை ஆறுதல் சொல்லுப்பா.. கண்ண மூடி கண்ணத் தொறக்குற நேரத்துல, குடும்பத்தையே இழந்துட்டு அனாதையா நிக்கறா அந்தச் சின்னப் பொண்ணு. பாவம்யா... அவங்க குடும்பத்துக்கே செல்லப்பொண்ணு அது. அவளை அவிக அய்யனும், அண்ணனும் எப்படித் தாங்குவாங்க தெரியுமா? இப்ப திடீர்னு அவங்களெல்லாம் இல்லைன்னு சொன்னா, அவளோட நிலமை எப்படியிருக்கும், யோசிச்சுப் பாரு...
யாரும் அப்படி அனாதையா ஆகக்கூடாது திவா. இனி அவ நம்ம குடும்பத்துல ஒருத்தி. உன்னோட மனைவி. இனி நீதான் அவளோட ஆறுதல். உனக்கு இதையெல்லாம் ஏத்துக்கக் கஷ்டமாகத் தான் இருக்கும்... இருந்தாலும், அவளை நினைச்சு, கொஞ்சம் பெரியமனசு பண்ணுப்பா..."
![](https://img.wattpad.com/cover/211812310-288-k99704.jpg)