சிலகணங்கள் இமைக்கக்கூட மறந்து உறைந்து அமர்ந்திருந்தாள் வானதி.
கண்ணீர் அதுபாட்டில் நிற்காமல் வழிய, அவனிருக்கும் அறையில் தானும் இருப்பது பிடிக்காமல், வேகமாக எழுந்து வெளியேறினாள். கூடத்தில் அமர்ந்தவள் கைபேசியில் தன் குடும்பப் புகைப்படத்தைப் பார்த்து, அதைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
'சிலநேரம் அன்புகொண்டவன்போல் நெருங்குகிறான்... சின்னச்சின்னதாய் ஆசைக்கோட்டை மனதில் கட்டவைக்கிறான்... பின் அவனே அதைத் தகர்த்து வலிகளைப் பரிசளிக்கிறான்... இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் தோற்பது என் காதல்தானா??'
நேரம்போவது தெரியாமல் அங்கேயே அமர்ந்து கரைந்து அவள் கண்ணயர, அங்கே அறைக்குள் மூடிய கண்களின்வழி நீரை உகுத்தபடி இருளினுள் மூழ்கித் துயரை மறக்க முயன்றுகொண்டிருந்தான் அவன்.
___________________________________
கண்மூடித் திறப்பதற்குள் தேர்வு நெருங்கிவிட, வீட்டில் அனைவருமே வானதிக்காகப் பார்த்துப்பார்த்து அனைத்தையும் செய்ய, அவன்மட்டும் அவளிடம் பேசமுயன்று தோற்றுக் கொண்டிருந்தான். நாளை முதலாவது தேர்வு. அன்று இரவு உணவுக்குப்பின், நாளைய தேர்வுகளுக்காக அவள் தூங்காமல் படித்துக்கொண்டிருக்க, அவளுக்குத் துணையிருப்பதற்காக ஹரிணியும் பானுவும் உடன் அமர்ந்திருந்தனர்.
அம்மாவும் அப்பாவும் தூங்கச் சென்றுவிட, அவளில்லாமல் தனியே தூங்கப்பிடிக்காமல் கூடத்தையே சுற்றிவந்தான் அவனும்.
குட்டிபோட்ட பூனை போல அவன் அங்குமிங்கும் நடப்பதைப் பார்த்து, ஹரிணியும் பானுவும் கண்களாலேயே சிரித்துக்கொண்டனர். பானு அவளுக்குக் காபி எடுத்துவருவதற்காகச் செல்ல, ஹரிணி கடைசிநேரத் திருப்புதலுக்காக அவளிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள்.
திவாகரைக் கவனித்தாலும் திரும்பிப்பார்க்காமல், தனது பாடத்தில் முழுக்கவனம் செலுத்தி விடையளித்துக் கொண்டிருந்தாள் வானதி. நாளைய பரீட்சை அவளது வாழ்க்கை. அது நிச்சயமானது. திவாகரைப் போல அது மாறிவிடப் போவதில்லை.