வயல்வெளியைப் பார்க்கவந்த இடத்தில் கருங்கற்கள் வைத்து ப்ளாட் பிரித்திருந்த தரிசு நிலத்தைப் பார்த்து மனம்கலங்கி நின்றாள் வானதி.
"ஏதோ வயக்காடுன்னு சொன்ன? வெறும் பொட்டல்காடா இருக்கு??"
திவாகர் நகைப்புடன் கேட்க, அதற்குக் கோபப்படக்கூட முடியவில்லை அவளால். ஒரே வருடத்தில் இப்படி மாறிப்போயிருக்கும் விவசாய நிலங்களைக் கண்டு நெஞ்சு பதைத்தது அவளுக்கு. விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என நாளொரு மேனியும் கூறிவளர்த்த குடும்பத்தைச் சேர்ந்தவளால், பசுமை கொஞ்சும் வயல்கள் யாவும் காணாமல்போய்விட்ட சோகத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. திவாகரின் அளவுக்கு அவள் நேசித்தவை இந்த பச்சை வயல்கள்தானே!
கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தாள் அவள். திவாகர் வெய்யிலுக்கு ஒதுக்கமாய் ஒரு வேப்பமரத்தடியில் போய் நின்றுகொண்டான். சிறிதுநேரம் பேசிவிட்டு அவனிடம் வந்து நின்றாள் அவள். முகம் களையிழந்து வாடியிருந்தது.
'குடும்பத்தை இழந்த அன்று கொண்ட அதே சோகத்துடன் இருக்கிறாளே... வயல்கள் அழிந்ததற்கா இத்தனை வருத்தம்?'
கையை நீட்டி அவனுக்கு நிலத்தைக் காட்டினாள் அவள்.
"அங்கே, பச்சையாத் தெரியுதே... அதுதான் நம்ம வயல். பக்கத்துலயே கால்வாயும் இருக்கு. பம்ப்செட்டும் இருக்கு. மீதி நிலமெல்லாமும் ஊர்க்காரங்க சிலரோடதுதான். வயல்ல வேலைபாக்க, மதகுப்பட்டியில இருந்து ஆளுங்க வருவாங்க. அறுவடையப்போ சுடலைமாடசாமிக்கு படையல்போட்டு, கிடா வெட்டுவோம்.
எல்லாரும் சேர்ந்து, விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கணும்னு, அப்பாதான் ஆரம்பிச்சு வச்சார். அண்ணன் அதுக்கெல்லாம் போகவே மாட்டான். ஆனா ராப்பகல் பாக்காம வயல்ல எதையாவது செஞ்சுட்டே இருப்பான்.
போன வருஷம் கடலைக்காய் போட்டிருந்தோம். அப்ப தென்னை நார் வாங்கிட்டு வந்து, வயல்முழுக்க போட்டுவிட்டான்.அப்பா திட்டுனாரு, பூச்சி பிடிச்சிடும்னு. ஆனா, அவனோட யோசனையால தான், அடிக்கற வெய்யிலுக்கு வயல்ல தண்ணி வத்திப் போகாம, குறைஞ்ச பாசனத்துலயே நிறைஞ்ச மகசூல் பாக்கமுடிஞ்சுது. அண்ணனுக்கு பயங்கர அறிவு. அதையெல்லாம் மண்ணை உயர்த்த பயன்படுத்தணும்னு ஆர்வம். பயங்கர energetic. துறுத்துறுன்னு எதையாச்சும் செஞ்சுட்டே இருப்பான். உனக்குத்தான் தெரி--"
![](https://img.wattpad.com/cover/211812310-288-k99704.jpg)
YOU ARE READING
நீயன்றி வேறில்லை.
Mystery / Thrillerஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...