வண்டியில் விபத்தானதற்கு எவ்வித அறிகுறியும் தென்படாததால் வானதிக்கு சந்தேகம் பிறந்தது.
'விழுந்து விபத்தாகியிருந்தால், எதற்காக சுதாகர் அதைச் சொல்லத் தயங்கவேண்டும்? திவாகர் மட்டுமே ஏன் அதைச் சொல்லவேண்டும்? என்ன மறைக்கிறான் என்னிடம்?'
தன்னிடம் ஏன் பொய்சொல்ல வேண்டுமெனப் புரியாமல், தன்னறைக்கு திவாகரைத் தேடிச் சென்றாள் அவள்.
கையிலும், வயிற்றிலும் பெரிய கட்டுக்களாகப் போடப்பட்டிருக்க, அதில் ரத்தத் துளிகளும் தெரிந்தன. அவள் வந்ததைப் பார்த்தவன் வலியிலும் லேசாகப் புன்னகைக்க, வானதிக்கு இன்னும் கண்ணீர் பெருகியது. வீல்சேரிலிருந்து மெல்ல எழுந்து கட்டிலில் சாய்தது அமர்ந்தான் அவன். வாயைப் பொத்தி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அவனிடம் சென்று அமர்ந்து அவன் தலையைக் கோதினாள் வானதி. அவளது கையைப் பிடித்துக்கொண்டு ஆறுதலாக அழுத்தினான் அவன்.
"என்ன நடந்தது திவா? என்கிட்ட சொல்லக்கூடாத அளவுக்கு அப்படி என்ன ஆச்சு?"
"ஹேய்.. நிஜமாவே பைக் ஓட்டறப்போ விழுந்துட்டேன்.. அவ்ளோதான்.. நீ ஏன் இப்ப கண்டதை கற்பனை பண்ணிக்கற?"
"சரி.. எங்க விழுந்தீங்க? எப்படி விழுந்தீங்க? எந்தப்பக்கம் போயிருந்தீங்க?"
"ப்ச்.. இதென்ன போலீஸ் விசாரணை மாதிரி இத்தனை கேள்வி? எனக்கு சரியா ஞாபகம் இல்ல.. டையர்டா இருக்கு. செடேட்டிவ் போட்டதால தூக்கம் வருது.. நான் தூங்கறேன்"
மேற்கொண்டு அவளை எதுவும் கேட்கவிடாமல், புரண்டு படுத்துக்கொண்டான் அவன். கண்ணீருடன் அவன் தலையை வருடிக்கொடுத்தவள், அதற்குமேல் என்ன செய்வதெனத் தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். பானுவும் ஹரிணியும் சில முறை வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். சுதாகர் வந்து ஓரமாக நின்றான், தலையை தொங்கப்போட்டுக்கொண்டு. பொறுக்கமாட்டாமல் அவனிடம் சென்று தீர்க்கமாக முறைத்தாள் அவள்.
"என்ன ஆச்சு அங்க? எப்படி அடிப்பட்டுச்சு? உண்மைய சொல்லு நீயாச்சும்."
![](https://img.wattpad.com/cover/211812310-288-k99704.jpg)
YOU ARE READING
நீயன்றி வேறில்லை.
Mystery / Thrillerஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...