ரூபாவை அங்கே எதிர்பாராத அதிர்ச்சியில் அவன் உறைந்துநிற்க, மனமுடைந்த பார்வையுடன் இருவரையும் பார்த்துவிட்டு, அவசரமாக அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி, அவ்விடம்விட்டு அகன்றாள் வானதி. என்னென்னவோ எதிர்பார்த்த இதயம் இந்த அதிர்ச்சியைத் தாளாமல் நொறுங்க, சுற்றிலும் நடக்கும் எதையும் கவனிக்க சக்தியின்றி, கண்களை இறுக்க மூடினாள்.
அவள் போவதைக் கண்டும் ஏதும் செய்யத் தோன்றாமல், தன் கைக்குள் நிற்கும் ரூபாவையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் திவாகர். நெஞ்சில் பலவித உணர்வுகள் குழம்பிக் குமைந்தன. கண்முன்னால் நிற்பவளை ஏற்கவும் முடியாமல், கண்மறைந்து செல்பவளைத் தடுக்கவும் முடியாமல், மரம்போல் நின்றான் அவன். இன்று அவளிடம் கூறவென்றே தொடுத்துவைத்த வார்த்தைகள் யாவும், அவனது நெஞ்சின் அனலில் பொசுங்கிப்போயின. உயிரே இல்லாமல் கண்கள் மரத்துப்போயின.
ரூபாவோ அவளது உயிரே அவன்தான் என்பதுபோல் இடைவெளியின்றி அவனை இறுக்க அணைத்துக்கொண்டு நிற்க, சுற்றிலும் சலசலக்கும் குரல்களும், பார்வைகளும் துளைக்க, அவளை மென்மையாகத் தாங்கிக்கொண்டு சற்றே மறைவாகச் சென்றான் திவாகர்.
"ரூபா..? நீ.. இங்க எங்கே??"
திக்கித்திணறி வார்த்தைகள் வர, கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டாள் ரூபா.
"I.. can't. I just can't."
ஞாபகங்கள் மழைபோலத் தெளிக்க, அவளுடன் காதல்கொண்டு களித்த நாட்களின் நினைவுகளால், குற்ற உணர்வு மேலோங்கியது அவன் நெஞ்சில்.
'எத்தனை எளிதாக இவளை மறந்துவிட்டு இன்னொருத்தியிடம் காதல்செய்யத் தொடங்கிவிட்டோம்... மறக்கவே முடியாத முதல் காதல் என்றெல்லாம் நினைத்துவிட்டு, இப்போது இவளைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் போனது எப்படி? அப்போது நாம் உண்மையில் இவளைக் காதலிக்கவில்லையா என்ன? உண்மையாகக் காதலித்ததால்தான் இன்னும் மறக்காமல் என்னைத் தேடி வந்திருக்கிறாளோ இவள்??'"ரூபா... அழாத. What happened?"
"திவா... என் உலகம் நீதான். உன்னைவிட்டு என்னால இருக்கவே முடியாதுடா.. உன் ஞாபகங்கள் என்னை தினம்தினம் கொல்லுதுடா. நீ கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னப்ப, என்னால நம்பமுடியல. நம்பவச்சு ஏமாத்திட்டியேன்னு உன்மேல கோபம், ஆத்திரம், எல்லாமே வந்துச்சு. நானும் ஈஸியா உன்னை மறத்துடலாம்னுதான் நினைச்சேன்... ஆனா முடியல. லவ்வால, டிப்ரெஷனுக்குப் போயி, தெரப்பி எல்லாம்கூட போனேன். கடைசியா போன தெரப்பிஸ்ட் தான், உன்னை ஒருதரம் பார்க்கசொன்னார் திவா. என் காதலுக்கு, நம்ம காதலுக்கு, உன்னையே ஒரு முடிவுரை எழுத சொன்னார். என் கண்முன்னாடி, முடிக்காத கதையா நிக்கற என் காதலுக்கு, ஒரு முடிவு வேணும். I need a closure."
YOU ARE READING
நீயன்றி வேறில்லை.
Mystery / Thrillerஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...