'இந்தப் பெண்கள் எல்லாம் எப்படித்தான் ஒன்றுபோலவே யோசிக்கின்றனரோ' என்று திகைத்துப்போயிருந்தான் திவாகர்.
அவனது முகமாற்றத்தைக் கவனித்த வானதி சற்றே கூர்மையாக, "ஏன், பாக்கக் கூடாதா?" என்றிட, அவன் அவசரமாக மறுத்தான்.
"சேச்சே.. அப்டில்லாம் ஒண்ணுமில்ல. உன் எக்ஸாம்ஸ் முடியட்டும். நான் கூட்டிட்டு போறேன்.""ம்ம்"
மீதிப் பயணம் அமைதியாக நிகழ, வீடு வந்ததும் வாசலில் நின்ற பானுவின் முகத்தைப் பார்த்து சற்றே வியப்பாகினர் இருவரும்.
இனங்காண இயலா உணர்வுடன் நின்றிருந்தாள் அவள். லேசான பதற்றம், படபடப்பு, ஆனால் நிறையத் திகைப்பும் சந்தோஷமும்.
"என்னக்கா ஆச்சு?" எனக் கேட்டபடியே அவளிடம் சென்றாள் வானதி. வீட்டுக்குள் நுழையும் போது அவர்களுக்காகக் காத்திருந்ததுபோல் முன்னறையிலேயே வேதாசலம் அமர்ந்திருந்தார். அவளைப் பார்த்ததும், "வானி, உங்க கல்யாண வரவேற்புக்கு நாள் குறிச்சாச்சு. அடுத்த முகூர்த்தம், ஆவணி பன்னெண்டு. அதாவது, இன்னும் எட்டு நாள்ல. சுதாகர் கிட்ட சொல்லியாச்சு, அவன் நாளைக்கு காலைல வந்துருவான். பத்திரிக்கை அடிக்கக் குடுக்கறதுக்கு பொன்னையா போயிருக்கான்." என வெகுவேகமாக அடுக்கினார்.
வானதியும் திவாகரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். வேதாசலம் அதைக்கண்டு, "என்ன, எல்லாம் திருப்தி தானே? தம்பி, உனக்கு எதுவும் பிரச்சனையா?" என்றார். திவாகர் வேகமாகத் தலையாட்டினான்.
"எல்லாம் சம்மதம் தான்ப்பா."
"ம்ம்.. அம்மா வானி, நீ எதுக்கும் அலட்டிக்காத. உன் பரீட்சை இந்த வாரம் முடிஞ்சிரும்ல, அதான், சீக்கரமா நாள் குறிச்சோம். ஆகவேண்டிய வேலை எல்லாம் பாத்துக்க ஆள் இருக்கு. நீ எதுக்கும் சிரமப்பட வேண்டாம். என்ன?"
அவன் சற்றே தயக்கமாகத் தலையசைத்தாள்.
"சரிங்க மாமா.."பானு பூரிப்பான முகத்தோடு வானதியை ஏறிட்டாள். அவளது மகிழ்ச்சியின் காரணம் புரிந்ததும் வானதி குறும்பாகச் சிரித்தாள். உள்ளே சென்றதும், "எதோ எங்க ரிசப்ஷனுக்கு இத்தனை அவசரப்படறீங்கனு பாத்தா, உங்க ஆளை வீட்டுக்குக் கூப்பிடறதுக்கு தான் இவ்ளோவுமா?" என்று நகைக்க, பானு வெட்கப்பட்டாள்.
![](https://img.wattpad.com/cover/211812310-288-k99704.jpg)
YOU ARE READING
நீயன்றி வேறில்லை.
Mystery / Thrillerஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...