வானதியை விட்டுவிட்டு அறைக்குள் வந்த திவாகரின் மனதும் நிலைக்கொள்ளாமல் தவித்தது.
'இங்கே ஆனந்தமாய் நாட்களைக் கழித்ததால் என் கடமைகளை மறந்துவிட்டேனா? மீண்டும் அமெரிக்கா செல்ல வேண்டுமல்லவா?
செல்ல வேண்டுமா? செல்லாமல்
இருந்துவிடக் கூடாதா...?'மனதின் ஓரத்தில் ஏக்கமாக ஒரு குரல் கேட்டதும் திகைத்தான் அவன். இங்கிருந்து போகவே மனது ஏன் தயங்குகிறதெனப் புரியவில்லை அவனுக்கு. வருடா வருடம் வந்து செல்லும் வழக்கம்தான்.. ஆனால் இம்முறை ஊரைவிட்டுப் போவதற்கே மனம் கலங்கி நொந்தது.
தனக்குத் தெரிந்து முத்துப்பட்டியை ஒரு ஊராக மதித்ததே இல்லை அவன். ஏன், இந்தியாவையே அவன் தாய்நாடாக மதித்ததில்லை. எப்போது எதைப் பார்த்தாலும் மனதில் உதிக்கும் முதல் எண்ணம், 'அமெரிக்காவுல எல்லாம் இந்த மாதிரி இருக்காது... இந்தியா மட்டும்தான் இன்னும் முன்னேறவே இல்ல' என்பதுதான். ஆனால் இந்தத் தடவை, தன் ஊரோடு மனதளவில் நெருங்கியிருந்தான் அவன். ஊரோடு மட்டுமா...
வானதியை நினைத்தபோதும், அவளைவிட்டுச் செல்லவேண்டும் என நினைத்தபோதும் மனதில் ஏக்கம் கூடிக் கனத்தது. இருக்கப்போகும் கொஞ்ச நாட்களில் அவளோடு சண்டைகள் போடாமல், வம்புகள் செய்யாமல், அழகாகச் செலவிட வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு, அதனோடு உறங்கியும் போனான்.
வானதியோ, பால்கனியில் தரையில் அமர்ந்தபடி, கால்களைக் கட்டிக்கொண்டு அதில் தலைசாய்த்துக்கொண்டாள். மனது யாருக்காக அழவேண்டும் எனப் புரியாமல் இருந்தாலும், கண்ணீரைக் கச்சிதமாய் அனுப்பிவைத்தது.
'எல்லோரும் போன பின்பும் எனக்காக நீயேனும் இருக்கிறாய் என்று ஆறுதல் கொண்டேனே... நீயும் போகிறாயா? நீயன்றி வேறில்லை என்று நம்பும் என்னைத் தவிக்கவிட்டு, தூரமாய்ப் போகிறாயா? இன்னும் எத்தனை தொலைவு செல்வாய்? எத்தனை முறைகள் என் இதயத்தை உடைப்பாய்? ஏன் திவா..? ஏன் என்னை மறந்தாய்? ஏன் சென்றாய்? ஏன் மீண்டும் என் வாழ்வில் வந்தபோதும், அதனை துச்சமாக நினைத்துத் துண்டாக்கிச் செல்கிறாய்? உன் அருகில் இருந்தாலும் வேதனை, தொலைவில் இருந்தாலும் வேதனை. பேசினாலும் வலி, மௌனமாய் இருந்தாலும் வலி. இன்னும் என்ன?
![](https://img.wattpad.com/cover/211812310-288-k99704.jpg)
YOU ARE READING
நீயன்றி வேறில்லை.
Mystery / Thrillerஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...