கைபேசியைப் பார்த்து திவாகர் முகம்சுழிப்பதைக் கண்ட வானதி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள். அவள் கைபேசித் திரையைப் பார்க்குமுன் மறைத்தவன், சட்டென அதை எடுத்துக்கொண்டு வெளிமுற்றத்துக்குச் செல்ல, சற்றுமுன் முகத்தில் நிறைந்த மகிழ்ச்சி எல்லாம் வடிந்ததுபோல் ஆனது அவளுக்கு. செல்பவனை ஒருகணம் பார்த்துவிட்டு, மீண்டும் ஹரிணியிடம் திரும்பிக்கொண்டாள் வானதி.
வெளியே வந்த திவாகர் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான். எதிர்முனை பரபரத்தது.
"ஹலோ.. மிஸ்டர் திவாகர்?"
"சொல்லுங்க இன்ஸ்பெக்டர். "
"விக்னேஷோட மொபைல் உடனே வேணும் எனக்கு. கேஸ்ல முக்கியமான திருப்புமுனையை நான் நெருங்கிட்டேன்னு நினைக்கறேன்.."
"நீங்க டிஸ்சார்ஜ் ஆகியே மூணு வாரம்தான் ஆகுது சார்... டிஸ்சார்ஜ் ஆன அன்னிக்கு ஒருதரம் கால் பண்ணியிருந்தீங்க. இப்ப திடீர்னு கூப்பிடறீங்க..?"
"லிசன், ஃபோன்ல பேச முடியாது. அந்த மொபைலை எடுத்துட்டு ஸ்டேஷனுக்கு வரமுடியுமா, உடனே?"
சிலநொடிகள் தயங்கினான் அவன். பின் பெருமூச்சு ஒன்றை உதிர்த்துவிட்டு, "வரேன்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
உள்ளே வந்தபோது அனைவரும் அவனையே கேள்வியாகப் பார்க்க, தலையைத் திருப்பியபடி, "அவசரமான விஷயம், இப்ப வந்துடறேன்.." என்றவாறு நகரப் போக, "இந்த ஊருல உனக்கு யாரைத் தெரியும்னு இப்ப அவசர வேலை வந்தது?" எனக் கேட்டாள் வானதி. மற்றவர்களுக்கும் அதே கேள்வி இருந்தது அவரவர் முகத்திலேயே தெரிந்தது.
பதிலளிக்காமல் கையலம்பிவிட்டு, தனதறைக்குச் சென்று விக்கியின் கைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான் அவன். சிலகணங்கள் சந்தேகமாக அவனைப் பார்த்துவிட்டு, முகத்தை சுழித்துவிட்டு, உணவின் பக்கம் திரும்பினாள் அவள். அருகிலிருந்தபோது அவனோடு பேசாமல் பாசாங்கு செய்து விளையாடியவள், அவன் கிளம்பிய பின்னர் நிலைக்கொள்ளாமல் தவித்தாள். சாப்பாட்டிலிருந்து எழுந்தவள், வாசலுக்குச் சென்று முற்றத்தில் அமர்ந்தாள். ஹரிணியும் பானுவும்கூட அவளைப் பின்தொடர்ந்து வந்துவிட, வாடிய அவள் முகத்தைக் கண்டு கரிசனமாக விசாரித்தாள் பானு.
![](https://img.wattpad.com/cover/211812310-288-k99704.jpg)