குறுந்தொகை - இனித்த வேப்பங்கட்டி
🏐காதல் என்பது இனிமையான விஷயம் தான். காதல் புரியும் போது காதலர்கள் இருவரும் மிக மிக இனிமையாக பேசுவார்கள். நன்றாக உடுத்துவார்கள். ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.
இவளோடு வாழ் நாள் எல்லாம் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற அவனுக்கு ஒரு கற்பனை. இவனோடு வாழ் நாள் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் அவளுக்கு ஒரு கற்பனை.
உணர்ச்சிகள் தூண்டப் பட்ட நிலையில் இருவரும் இருப்பார்கள்.
கதைகள் கற்பனைகள், சினிமாவில் பார்த்தது, என்று எல்லாம் கலந்து கலர் கலராக கனவுகள் வரும்.
கவிதை வரும். படம் வரையத் தோன்றும். உலகம் அழகாகத் தெரியும். காரணம் இல்லாமல் சிரிப்பு வரும். தூக்கம் போகும். மண்ணிலே விண் தெரியும். கால்களுக்கு சிறகு முளைக்கும்.
கடைசியில் திருமணம் ஆகும்.
திருமணம் ஆன சிறிது நாளிலேயே , பெரும்பாலான காதல் கசக்கத் தொடங்கும். பொருளாதார நெருக்கடி. எதிர்பார்ப்புகள் தீர்ந்த பின் ஒரு ஏமாற்றம் - இவ்வளவுதானா என்று. இதற்கா இவ்வளவு அலைந்தோம் என்று ஒரு வெறுப்பு.
பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி காதலுக்கு முன் இருந்த அந்த பாசம், நேசம், பிரியம், அன்யோன்யம் திருமணத்திற்கு பின்னும் அப்படியே தொடர்வதில்லை - பெரும்பாலான நேரங்களில்.
இது ஏதோ இன்று நேற்று நடக்கும் நிகழ்வு அல்ல.
சங்க காலம் தொட்டே இப்படித்தான் இருக்கிறது.
குறுந்தொகை பாடல்.
தலைவனிடம் , தோழி சொல்லுகிறாள்...
"அந்தக் காலத்தில் (காதல் செய்யும் காலத்தில்) தலைவி வேப்பங் காயைத் தந்தாலும் வெல்லக் கட்டி என்று சொல்லி அதை சுவைத்தாய். இப்போது அவளே குளிர்ந்த இனிய நீரைத் தாந்தாலும் சுடுகிறது , கசக்கிறது என்கிறாய் ...எல்லாம் அன்பு குறைந்ததனால் வந்தது " என்று சொல்லுகிறாள்.
![](https://img.wattpad.com/cover/268491129-288-k74818.jpg)